Monday, September 5, 2016

இன்று நீ நாளை நான்

நாஞ்சில் நாடன் கட்டுரைத்தொகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். ஒரு பக்கம் வந்தவுடன்  பொறி தட்டியது. படிப்பதை நிறுத்தி சிறிது கவலையில் ஆழத்தூண்டியது.  அந்தப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள  ஒவ்வொரு இடமும் நிகழ்வும் எனக்கு நிகழ்ந்த/நிகழப்போகும் சம்பவம் என்றே தோணுவதை தவிர்க்க முடியவில்லை.  அந்தப் பக்கத்தை   அப்படியே கீழே தருகிறேன்:

.....சோர்ந்த நடையில் தெரிந்த முகம் ஒன்று, எழுபத்தைந்து  வயதிருக்கும்.   பதினைந்து  நாள் தாடி.  காவி வேட்டி - வெள்ளை அரைக்கை சட்டை.  எங்கே பார்த்தோம் என்று நினைவு நதியில் துழாவினேன்.  எனக்கும்தானே வயதாகிறது!

சற்றுக்கூர்ந்து கவனித்ததில் - உண்மையில் நாங்கள் தீவிர இலக்கியவாதிகள் அவதானித்ததில் என்றே எழுத வேண்டும் - புலனாயிற்று.  எங்கள் நிறுவனம் கணக்கு வைத்திருந்த வங்கியில் மூத்த மேலாளராக இருந்தவர்.  மனிதனாகவும் இருந்தவர்.

" என்ன சார் இப்படி?" என்றேன் அதிர்ச்சியில்.  அவர் பக்கம் சென்று கைகளைப்பற்றினேன்.  மெலிதாகச் சிரித்தார்.  எப்போதும் வாய் விட்டுச் சிரிப்பவர்தான்.

"வாங்க டீ குடிப்போம்!" என்றார்.

"என்ன சார் ஆச்சு? இப்பிடிப்பரதேசிக்கோலம்?" என்றேன்.
கொஞ்சம் சாலையை வெறித்தார்.  கண்கள் கலங்கினாற்போலவும் முகம் சற்றுக்  கோணினாற் போலவும் இருந்தது.

" வீட்டுக்காரி போயிட்டா... ஆறு வருஷம் ஆச்சு! ரெண்டு பொண்ணுங்க... ஒருத்தி மிச்சிகன்லே...ஒருதி ஆர்ம்ஸ்டர்டாம்லே..."

அதற்கு மேல் ஒரு கதாசிரியனுக்கு சொல்லத் தேவை இல்லை.  வடவள்ளியில் அவர் வீடு.  மருதமலையில் இருந்து வடவள்ளி, தொண்டாமுத்தூர் பேரூர் வழியாகக் கோவைப்புதூர் வந்து ஈச்சனாரி போகும் பேருந்து ஒன்று உண்டு.  தம்பி முருகனில் தொடங்கி அப்பன் சிவனைக் கண்டு அண்ணன் வினாயகனைத் தரிசிக்கலாம்.  மூன்றுமே முக்கியமான இறைத் தலங்கள்.  சும்மா ஏறி உட்கர்ந்து பயணச்சீட்டு வாங்கி, போய்த் திரும்பினால்  நான் கு  மணி நேரம் செத்துவிடும்.

சாய் போடத் தெரிந்திருக்கலாம்.  சமைக்கவும் தெரிந்திருக்கலாம். வாசிப்புப் பழக்கம் உண்டென்றும் இசை கேட்பதில் நாட்டம் உண்டென்றும் அறிவேன்.  ஆனால், அவை எல்லாம் போதுமா... உறங்கும் ஐந்து மணி நேரம் தவிர்த்து மீதி நேரம் கொல்ல?  சேமிப்பு இருக்கும்.  ஓய்வூதியம் வரும்.  ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்து வரும் அன்புப் பொழிவுக்குப் பங்கமில்லை.

" உடம்பைப் பாத்துக்கங்கப்பா...வேளைக்குச் சாப்பிடுங்கப்பா...மாத்திரை மறக்காம எடுத்துக்குங்கப்பா....வாக்கிங் போங்கப்பா....ரெகுலரா பிரஷர், சுகர் செக் பண்ணுங்கப்பா...எதானாலும் கூப்பிடுங்கப்பா....வச்சிரட்டாப்பா..."

மேலும் சில யாண்டுகள் சென்று, கால்கள் சற்றுத் தள்ளாடும் போது, நெரிசலான நகரத் தனியார் பேருந்தில் அவரைக் கற்பனை செய்து பார்த்தேன்.  முட்டிக்கொண்டு வந்தது அழுகை.  அந்த நாளுக்கு நானும் வெகு தூரத்தில் இல்லை.

இறைவனிடம் எதை யாசித்து நின்றிருப்பார் அவர்? மக்கள் நல் வாழ்வை? உடல் நலத்தை? வெள்ளைக் குதிரையில் மேக மூட்டங்களுக்கு நடுவே பூந்தென்றல் தழுவுவது போலொரு மரணத்தை?......

...........மரணத்துக்கான காத்திருப்பு அன்றி வேறேதும் செய்ய ஏலாத ஒற்றைத் தனியன்கள்  ஆணும் பெண்ணுமாய்ப் பல மொழி பேசும் எத்தனை கோடிப் பேர் இருப்பார்கள் இந்திய வள நாட்டில்? 'யாத்திரைப்பத்து' பகுதியில் மாணிக்கவாசகர் பாடுகிறார்.... 'தாமே தமக்குச் சுற்றமும் தாமே தமக்கு விதிவகையும். யாமார் எமதார் பாசமார் என்ன மாயம்?' என்று!  தாமே தமக்கு உறவினர்கள்.  தாமே தமக்கு ஆணையிடும் அதிகாரி.  நாம் யார்? எமதென்று எவருளர்? நம்மைப் பிணிக்கும் கட்டுக்கள் என்ன? என்ன மாயங்கள் இவை எல்லாம்?.........

No comments:

Post a Comment